நிலையாமை...!!
சைவ இலக்கியங்கள் யாவும் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என அப்பட்டமாக எடுத்துக்காட்டுபவை. எதுவுமே இந்த உலகில் நிரந்தரம் இல்லை என்பதே அவற்றின் அடிநாதம். வாழ்வில் நிலையாமை ஒன்றே நிரந்தரம் என்பதை சைவ இலக்கியங்களைப் படித்த ஒருவனால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
பணம்,பொன்,பெண்,பொருள் என்ற மாயைகளில் இருந்து எளிதாக வெளிவர முடியும். ஆனால், இன்று சைவத்தைப் போதிக்கும் கஞ்சா புகழ் சாமியார்கள் அத்தனைக்கும் ஆசைப்படு என இயற்கைக்கு எதிராய் வடை சுட்டு விற்றுக்கொண்டுள்ளார்கள்.
நிலையாமை என்பதை போதிப்பதே பக்தி.ஆனால், இங்கு கடவுளை முன்னிறுத்தி கலவரம்,வன்முறை,பாகுபாடு,நில அபகரிப்பு என சகலத்தையும் பக்தர்கள் முன்னின்று நடத்திக்கொண்டுள்ளார்கள்.
இவ்வுலகத்தில் இருப்பவை எல்லாம் நிலையானது, நம்மிடம் இருக்கும் செல்வம்,சொத்து எல்லாம் எப்பொழுதும் நம்மிடமே இருக்கும் என்கிற நினைப்புத்தான் ஆணவத்திற்கு வழிவகுக்கும். மானுடப்பதர்களாகிய நம்முடைய அந்த ஆணவத்திற்கு கசையடி கொடுக்கத்தான் இலக்கியங்கள் நிலையாமையை முக்கியக் கருப்பொருளாகப்பேசின.
ஆனால், இன்று அதையெல்லாம் கேட்பாரில்லை. என்ன சொல்கிறது என விளங்கிக்கொள்வாரில்லை. எடுத்தோம்,கவிழ்த்தோம் என கடவுளைக் கொச்சைப்படுத்த பக்தர்களே முன் நிற்பது தான் காலத்தின் கோலம். வேல் பூசை என முருகனை சந்தி சிரிக்க வைத்தக்கொடுமை எல்லாம் இங்கு தான் நடக்கும்.
எந்தவொன்றையும்,இப்போது நாம் பெற்றிருக்கின்ற எதையும் எப்போது வேண்டுமானாலும் இழக்க நேரிடும் என்பதை அறிந்து மனத்தை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக பட்டினத்தார் மிக அருமையான ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
*
மையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும் செந்தீ
ஐயாநின் மாயை யுருவெளித்டோற்றம் அகிலத்துள்ளே
மெய்யாய் இருந்தது நாட்செல நாட்செல வெட்ட வெறும்
பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே
*
//மெல்லப்போனதுவே// என்பது தான் இதில் இல்லாமையை மனங்கோனாமல் எடுத்துக்காட்டுகிறது. எப்பொழுது வந்தது,எப்பொழுது போனது என்று நாம் உணரும் முன்னரே நம்மைவிட்டுப்போய்விடக்கூடும் என்று இப்பாடலின் மூலம் நிலையாமையை உணர்த்துகிறார் பட்டினத்தார்.
நன்றி...!!
Comments
Post a Comment