இவனுக்குத் தண்ணில கண்டம் , பார்க்க போன எங்களுக்கு வண்டியால கண்டம்.....
காலையில்
கல்லூரி கிளம்பியதிலிருந்தே, விபத்துக்களை லைவாக
பார்த்தது, நாள்
முழுவதும் விபத்துக்களை பற்றியே கேட்டது
என ஒரு விதமாக படபடப்பாகவே இருந்தது, காலையில் விபத்தை கண்ணால் பார்த்தது தலைவலியையும்,
ஒரு விதமான வாமிட் வருவது போன்ற உணர்வையும் நாள் முழுவதும் தானமாக தந்து விட்டது.
அந்த விபத்தே, பகல் முழுதும் கண் முன்னே வந்து பல்லைக்காட்டியது,மாலை சற்று ரிலாக்ஸ்-ஆகவேண்டும் என்பதற்காக , நைட்
ஷோ படத்துக்கு போலாம் என தீனா அழைக்க ,பாயும் நானும் ஒரு வித
தயக்கத்தோடே தலையசைத்தோம். ஸ்பிலண்டரில் மூவரும் டிரிபிள்ஸ் செல்வது என
முடிவடுத்தோம்,ஆளுக்கு நூறு ரூபாய் தான் பட்ஜட், 80 ரூபாய் தான் டிக்கட்
இருக்கும் எனவும் மீதம் இருக்கும் 20
ரூபாயை ஸ்நாக்ஸ் சாப்பிட வைத்துக்கொள்வோம்
எனவும் திட்டம் தீட்டினோம்,ஆனால் விதி எங்களுக்கு வேறு
விதமான திட்டம் வைத்திருந்தது.
கிளம்புவதற்கு முன்னரே ஹெல்மட்டைக்
காணவில்லை, அடித்துபிடித்து ரூம் முழுதும் தேடி ஒரு வழியாக கண்டுபிடித்து,போகும் வழியில் தீனாவை பிக்கப் செய்து கொண்டு,
வண்டியில் கிளம்பி சற்று தொலைவு சென்ற
பிறகே , யாரும் லைசன்ஸ் எடுத்து வரவில்லை , பர்ஸ் எடுத்து வரவில்லை என்பதை கண்டுகொண்டோம்.டிரிபிள்ஸ்,லைசன்ஸ் இல்லை போலீஸ்கிட்ட மாட்டுனா கொடுக்க,அஞ்சு,பத்துகூட ஒருத்தன் கிட்டயும் இல்லை ,மொத்தமா
ஆளுக்குநூறு ரூபாய் தான் வைத்திருக்கிக்றோம்,என பயந்து
கொண்டே சென்றோம்.நல்ல வேளை போலீஸ் நிப்பாட்டக்கூடிய இடத்தை எல்லாம் கடந்துவிட்டோம்
,
தலைமை
தபால் நிலையம் அருகே பெட்ரோல் போட ஒதுங்கினோம் (பெட்ரோலுக்கு நூறு தனியாக கொண்டு சென்றோம்), அந்த நேரம் பார்த்து அங்கேயும் விபத்து ,பெருத்த
சேதம் ஏதும் இல்லை,யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை,ஒரு தம்பதி தன் இரு குழந்தைகளோடு வண்டியில் சென்றுகொண்டிருக்கும் பொழுது ஒரு ‘டாட்டா ஏஸ்’ இடித்துவிட்டதால் கீழே விழுந்து
விட்டார்கள்.ஏற்கனவே பதட்டத்தில் இருந்த நாங்கள் மேலும் பதட்டமானோம். தேவை இல்லாமல் பதட்டமாவதை தவிர்க்க அங்கிருந்து விரைந்து கலையரங்கம்
தியேட்டருக்கு சென்றோம் .
தண்ணில கண்டம் படம் பார்க்க தூண்டியது
நம் கோஸ்ட் கோபால் வர்மா தான் , அவரது
நடிப்புக்காகவே படம் பார்க்க சென்றோம் , படத்துக்கு டிக்கட்
ஆளுக்கு நூறு ரூபாய் என குண்டைத் தூக்கி போட்டார்கள்.நாங்கள் வைத்திருக்கும்
300ரூபாயை வைத்து படம் பார்த்து விடலாம் , ஸ்நாக்ஸ்
சாப்பிடாமல் கூட இருந்து விடலாம், ஆனால் வண்டியை தியேட்டருள்
பார்க் செய்வதற்கு 10 ரூபாய் வேண்டுமே,அது எங்களிடம் இல்லை,வெட்கி தலைகுனிந்தோம் , எங்களுடைய இயலாமையை எண்ணி
வருந்தினோம்,எவன் கிட்டயும் பர்ஸ் இல்ல , சரி எவனுக்காவது போன் பண்ணலாம்னு பார்த்தா?
பத்துமணிக்கு எவன் வருவான்.? இனி பர்ஸ் இல்லாம எங்கயும்
வரக்கூடாது என சூலுரைத்தோம், தலை விதி நடக்கறது நடக்கட்டும்
என வண்டியை,
சென்ட்ரல் பஸ்டாண்ட் அபிராமி கேக்ஸ்
அண்ட் பேக்ஸ் முன் பார்க் செய்துவிட்டு,படம் பார்த்தோம்.படம்
இரண்டாம் உலகம் போல் தூக்கம் வரவழைக்காமல் ,
சிரித்துகொண்டே பர்க்க ஏதுவாக
இருந்தது.படம் முடிந்து வண்டியை ஸ்டார்ட் செய்தோம் எங்களோடு ஏழரையும் ஸ்டார்ட் ஆகியது.
வண்டியை ஸ்டார்ட் செய்த நொடி முதல்,மீண்டும் பயம்,பீதி,பதட்டம் .(
ஏன் எனத் தெரிந்து கொள்ள மீண்டும் இரண்டாவது பாராவை படித்துவிட்டுத் தொடரவும்)லைசன்ஸ்
இல்லை,டிரிபிள்ஸ்வேறு.பதட்டத்தின் உச்சத்தில் இருந்தோம்.
கிளம்பிய சிறிது நேரத்தில்,அரசுவிரைவு பேருந்து மற்றும்
எஸ்.டி கொரியர் வேன் இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு எங்களை தாண்டும் அவசரத்தில்
மயிரிழையில் இடிக்காமல் சென்றுவிட்டனர் , நாங்கள் சிறிது நிலைகுலைந்து பின்னர் மீண்டும் நார்மலாகி
பயணிக்கலானோம்.பதட்டத்தின் உச்சத்தில் மீண்டும் எங்கள் பயணம்.ஒருவழியாக டோல்கேட்
மற்றும் சுப்பிரமணியபுரத்தில் நின்று கொண்டிருந்த போலீஸ் காரர்களுக்கு ‘டேக்கா’ கொடுத்துவிட்டு தப்பித்தோம்,ஆனால்
அடுத்து வரும் தடைகளை நாங்கள் அறியவில்லை.
அடுத்த தடை ஏர்போர்ட் செக் போஸ்ட்டில் , வண்டியில்
பறந்து வந்த எங்களை ,அலேக்காக அணை கட்டி அமுக்கினார் ஒரு போலீஸ்காரர்,சிக்கிட்டோம் டா செவ்வாழை என மனதிற்க்குள் நினைத்துக்கொண்டு, நம்மல வச்சு இந்த ராத்திரில என்ன காமெடி பண்ணப் போறய்ங்கனு தெரியலையே என வெம்பிக்கொண்டிருந்தோம்.அஸ்
யூஸ்வல் எங்க படிக்கிற,எங்க போய்ட்டு வர்றீங்க, “என்னபடம்??”,கதம்கதம் ஆ? , என வழக்கமான பாணியில் விசாரித்துவிட்டு
,மேலும் கீழும் பார்த்தார் ,என்னடா? ஜட்டி ஓட சுத்திட்டு இருக்கிங்க?(3/4 ஐத் தான்
போலீஸ்கார் ,சாரி ஐயா ஜட்டி என விளித்தார் ). எனக் கேட்டதற்க்கு நாங்கள் ,நைட் டிரஸ் சார் என பம்மி பம்மி பதிலுரைத்தோம் .படம் எப்படியா இருக்கு? இப்பதான் ரெண்டு பேர் ‘கதம்கதம்’ படம் பார்த்துட்டு போறய்ங்க?ஆம உன் படம் பேரு என்னானு சொன்ன?? “தண்ணிலகண்டம்சார்
‘, ஏன்யா அப்ப கரைல கண்டம் இல்லையா? என
கேலி செய்து சிரித்தார். சிறிது நேரம் எச்சரித்துவிட்டு எல்லார் நம்பரையும் வாங்கிக் கொண்டு,இனி டிரிபில்ஸ் வரக்கூடாது என்று எச்சரித்துவிட்டு அனுப்பிவிட்டார்.நாங்களோ
நல்ல வேளை பைன் போடலை ,இதுக்கப்புறம் எவன் டா நம்மல நிப்பாட்டப்போறான்
என சொல்லி வாயை மூடவில்லை.
M.I.E.T காலேஜ் அருகே மீண்டும்
மடக்கிவிட்டர்கள்.இந்த முறை போலீசுக்கும் எங்களுக்கும் நிகழ்ந்த உரையாடல் தான் சற்று
சுவாரஸ்யமானது.
போலீஸ்: யார்டா வண்டி
ஓட்டுனது?
பாஷா:நான் தான் சார்.
போலீஸ்: ஆர்.சி புக் ,லைசன்சு எல்லாம் எடுத்துட்டு வா ??
பாஷா : ஆர்.சி புக் இருக்குங்க
சார், லைசன்சு எடுத்துட்டு வரலைங்க சார்!!!!!!
போலீஸ்: லைசன்சு இல்ல
அதுக்கு ஒரு ஐநூறு, டிரிபில்ஸ்க்கு ஒரு நூற்றைம்பது
, 650 ரூபாய் எடுத்துவச்சுட்டு போய்ட்டே இரு .....இல்லையா எவ்வளவு
பணம் இருக்குனு சொல்லு ,சின்னதா ஒரு கேஸ் போட்டுட்டு விட்டுடுறேன்.
பாஷா: சார் சாரி சார்.
போலீஸ்: பேரை சொல்லுயா?
பாஷா:சாரி சார்.
போலீஸ்: தம்பி பேரை சொல்லலனா?? அதுக்கு வேற கேஸ் இருக்கு...
( நாங்கள் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டோம்)
பாஷா; இப்ப தான் சார் ஏர்போர்ட் செக் போஸ்ட்ல
பார்த்துட்டு வர்றோம்
போலீஸ்: அப்ப இந்தப்பக்கம் இருக்க போலீஸ் காரங்கலாம் வேலைய விட்டுட்டு
போய்டலாமா??
தீனா; சாரி சார்....
போலீஸ்: உங்க காலேஜ் டீன்
யாரு?? டாக்டர் செந்தில்குமார் தான ?/ அவருக்கு மெசேஜ் அனுப்பிடுறேன்,மூனுபேரும் பெயரை சொல்லுங்கப்பா ?
தீனா; நைட் பஸ் இருக்காதுனு தான் சார் வண்டியில போனோம்.
போலீஸ்: பஸ் இல்லனா மூடிட்டு
தூங்க வேண்டியது தான எவன்டா உங்களை படத்துக்குபோகசொன்னது ( கோபப்படுவது போல் நடித்தார்)
வண்டி யாருது டா?
பாஷா; என்னுடையது சார்
போலீஸ்: அப்ப நீ தான்
இவங்க இரண்டு பேரையும் கெடுக்குற,
மற்றொரு போலீஸ்: பாஸ்போர்ட்
வாங்கிட்டியா,இல்லல வாங்கவரும் போது உன்ன கவனிச்சுக்குறேன்
நாங்கள்மூவரும் ;சாரி சார்
..........................
ஒரு 45 நிமிடமிரட்டலுக்குப் பிறகு ,சரிப்போய்த் தொலைங்க , இனி உங்க மூனு பேரையும் எங்கயும்
பார்க்கக்கூடாது ,தெருநாய் மாதிரி இனி உங்களைச் சுத்தறத பார்த்தேன் தூக்கி உள்ள வச்சுடுவேன்
என மிரட்டி அனுப்பிவிட்டர்.நாங்கள் தப்பித்தால் போதும் என ரூம்வந்துசேர்ந்தோம் ,நடந்ததை எல்லாம் சொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம்.இவ்வளவு கலவரத்துலயும்
எவன்கிட்டயும் பைன் (fine)கட்டலை என பெருமிதம் கொண்டோம்.......

Comments
Post a Comment